#சோழவரலாறு# #ராஜேந்திரசோழன்# #சோழர்கள்# #பழுவேட்டரையர்கள்#

வீரராஜேந்திர சோழன் கி.பி.1063- 1070
வீரராஜேந்திர சோழன் த/பெ. ராஜேந்திர சோழதேவன் கி.பி.1063- 1070

வீரராஜேந்திரன்இரண்டாம் இராஜேந்திர சோழனைத் தொடர்ந்து சோழ நாட்டு ஆட்சிபீடம் ஏறியவன் வீரராஜேந்திர சோழன். இவன் இரண்டாம் இராஜேந்திரனின் தம்பி ஆவான்.

இவனுடைய காலம் சோழ நாட்டின் வரலாற்றில் பிரச்சினைகள் மிகுந்த காலமாயிருந்தது. தெற்கு, வடக்கு இரு புறங்களிலுமிருந்தும் போர்களையும், போட்டிகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.

போர்கள்
வீரராஜேந்திரன் சோழர்களின் பரம்பரை எதிரிகளான சாளுக்கியருடன் பல போர்களை நடத்த வேண்டியிருந்தது. கிழக்குச் சாளுக்கியப் பகுதியான வேங்கி மீது சோழருக்கு இருந்த ஈடுபாடே இப் போர்களுக்கு முக்கிய காரணம் எனலாம். அத்துடன், தெற்கில், பாண்டி நாட்டிலும், ஈழத்திலும் சோழரின் மேலாண்மையைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தொடர்ந்து போராட வேண்டியிருந்தது.

சாளுக்கியப் போர்கள்
வீரராஜேந்திரன் சாளுக்கியருடன் நடத்திய கடுமையான போர்கள் பற்றிய தகவல்களை அவன் காலத்திய கல்வெட்டுக்கள் எடுத்தியம்புகின்றன. சாளுக்கியரை முறியடித்துச் சோழர் படை பெருவெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அவமானமுற்ற சோமேஸ்வரன் மீண்டும் ஒரு போருக்கு அழைப்பு விடுத்தான். அவன் முன்னர் தோல்வியடைந்த அதே கூடல் சங்கமம் என்னும் இடத்தைப் போருக்கான இடமாகவும் குறித்திருந்தான்.

அழைப்பை ஏற்ற வீரராஜேந்திரன் படைகளுடன் குறிப்பிட்ட இடத்துக்கு அருகே முகாமிட்டுக் காத்திருந்தான். போருக்காகக் குறிக்கப்பட்ட தினமான அன்று சாளுக்கியப் படைகள் தென்படவில்லை. ஒரு மாதம் வரை காத்திருந்த வீரராஜேந்திரன் சுற்றியிருந்த சாளுக்கியப் பகுதிகளில் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, துங்கபத்ரா நதிக்கரையில் வெற்றிக்கம்பம் ஒன்றையும் நிறுவினான்.

தானே அழைப்பு விடுத்த போருக்குச் சோமேஸ்வரன் வராது விட்ட காரணம் தெரியவில்லை ஆனாலும், இந் நிகழ்வினால் முன்னரிலும் கூடிய அவமானப்பட்ட சோமேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகின்றது.

கூடல் சங்கமத்தில் இருந்து கீழைச் சாளுக்கியர்களின் தலைநகரான வேங்கிக்குச் சென்ற வீரராஜேந்திரனின் படைகள் அங்கே சோழர் ஆதிக்கத்துக்கு எதிரான கிளர்ச்சிகளை முறியடித்தன. இப் போரில் வீரராஜேந்திரன், ஜனநாதன் என்பவன் தலைமையிலான மேலைச் சாளுக்கியப் படைகளைக் கிருஷ்ணா நதிக் கரையில் முறியடித்தான். வேங்கியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கீழைச் சாளுக்கியர் பகுதி முழுவதையும் வீரராஜேந்திரன் அடிப்படுத்தினான். விஜயாதித்தன் என்னும் கீழைச் சாளுக்கிய இளவரசனை வேங்கியில் மன்னனாக்கினான்.

கலிங்கத்துப் போர்
வடபகுதிப் போர்களில் கலிங்க நாடு, மேலைச் சாளுக்கியருக்கு உதவியாக இருந்தது. அத்துடன் மட்டும் இல்லாமல் சோழர்களின் வணிகச் சந்தைக்குப் பிரச்சனையாக முளைத்தது இந்த கலிங்க நாடு. சாளுகியர்களுக்கு உதவும் வண்ணம் கலிங்கர்கள் தமிழர்களை அடிமைப் படுத்த ஆரம்பித்தனர், இவர்களது இந்த செய்கை தமிழ் காவலர்களாகிய சோழர்களை இவர்கள் மீது படை எடுக்க செய்தது. இந்த போரின் தொடர்ச்சியே குலோத்துங்கனின் காலத்தில் நிகழ்ந்த கலிங்கத்துப் போரின் முக்கிய காரணமாகும். இதனால் கலிங்கத்தின் மீதும் படையெடுத்து வெற்றி பெற்றான்.

இலங்கைப் போர்
சோழரின் ஆட்சியின் கீழ் இருந்த இலங்கைத் தீவின் தென் பகுதியில் தன்னை உறுதிப்படுத்தி வந்த விஜயபாகு என்ன்னும் சிங்கள அரசன், சோழர்களை இலங்கையில் இருந்து துரத்த எண்ணி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தான். வீரராஜேந்திரன் இவனை அடக்குவதற்காக இலங்கையில் இருந்த சோழர் படைகளை இலங்கையின் தென்பகுதியான ரோகனா பகுதிக்கு அனுப்பினான். விஜயபாகுவின் வேண்டுகோளுக்கு இணங்கி பர்மாவின் அரசன் அவனுக்குத் துணையாகக் கப்பல்களையும் படைகளையும் அனுப்பினான். இவற்றின் துணையுடன் இலங்கையின் சோழர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிளர்ச்சிகளை உருவாக்குவதில் விஜயபாகு வெற்றி பெற்றான். இலங்கையில் ஏற்கெனவேயிருந்த சோழர் படைகளுக்குத் துணையாகச் சோழநாட்டிலிருந்தும் படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டன. இதன் மூலம் வீரபாண்டிய சோழன் கிளர்ச்சிகளை அடக்கினான் எனினும், உருகுணைப் பகுதியில் தனது பலத்தை, விஜயபாகு மேலும் அதிகரித்துக் கொண்டான். விஜயபாகுவின் நடவடிக்கைகள் பின் வந்த ஆண்டுகளிலும் தொடர்ந்தது. விஜயபாகு இலங்கை தேசத்தின் அடிமைத் தனத்தை களைந்து சுதந்திர தேசமாக்க பாடுப்பட்டான். அவனது வீரத்துக்கு பரிசாக இலங்கை தேசதினருக்கு சுதந்திர தாகமும் பிறந்ததால் சோழர்கள் பிற்காலத்தில் இலங்கையிலிருந்து பின் வாங்க வேண்டி இருந்தது.

கடாரப் படையெடுப்பு
வீரராஜேந்திரனின் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட சாசனம் ஒன்று, அவன், அரசன் ஒருவனின் வேண்டுகோளுக்கு இணங்கிக் கடாரத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்டதாகவும், அதனை அம்மன்னனுக்குக் கையளித்ததாகவும் கூறுகின்றது. உதவி கோரிய மன்னன் தொடர்பான தகவல்களோ, வேறு தகவல்களோ எதுவும் கிடைக்கவில்லை.
போர் தினவு எடுத்த தோள்களுக்கு எங்கு போர் நடக்கும் என்றும் சிந்திக்க மட்டுமே தோன்றும் ஆனால் வீர ராஜேந்திரன் காலத்தே போர் தினவு எடுத்து அலைந்த இந்த இளவலுக்கு. இவன் தோள் தினவின் பொருட்டு பிறந்தது சக்கர கோட்டத்து போர். ஆம் அந்த இளவல் நம் வீர நாயகன் “அநபாயன்” என்று வளர்ந்த அம்மாங்க தேவியின் புதல்வன் “குலோத்துங்க சோழன்” தான்.
சக்கர கோட்டத்தில் போர் புரிந்துக் கொண்டிருந்த அநபாயனை வரவழைத்து கடாரத்திற்கு அனுப்பி வைத்தான் வீர ராஜேந்திரன். கடாரப் பயணத்திற்குப் பின் குலோத்துங்கன் சீன தேசம் சென்றதாக வரலாறு இயம்புகிறது.

சாளுக்கியருடனான தொடர்பு
முதலாம் சோமேஸ்வரனின் இறப்புக்குப் பின்னர், இரண்டாம் சோமேஸ்வரன் மேலைச் சாளுக்கிய ஆட்சிபீடம் ஏறினான். தொடர்ந்து இவனுக்கும், இவனது தம்பியான விக்கிரமாதித்தனுக்கும் இடையே நிகழ்ந்த அதிகாரப் போடியினால் உள்நாட்டுக் கலகம் தோன்றியது. சோமேஸ்வரன் நாட்டின் தென் பகுதியை விக்கிரமாதித்தனுக்கு விட்டுக் கொடுத்தான். நிலைமையைப் பயன்படுத்திக் கொண்ட வீரராஜேந்திரன், விக்கிரமாதித்தனுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டு தனது மகளையும் அவனுக்கு மணமுடித்து வைத்தான்.

வீர ராஜேந்திரன் மக்கள்
வீர பாண்டிய சோழன், அதி ராஜேந்திர சோழன் என்று இரண்டு புதல்வர்களும் மதுராந்தகி என்று ஒரு மகளும் வீர ராஜேந்திரனுக்கு உண்டு. மதுராந்தகியை விக்கிரமாதிதன்னுக்கு திருமணம் முடித்து கொடுத்தான் சோழன். இதன் பொருட்டே விக்கிரமாதித்தன் வீர ராஜேந்திரனின் மரணிதிற்குப் பின்பு அதி ராஜேந்திர சோழனின் ஆட்சி காலத்தில் அரசியலில் ஈடுப்பட்டான். அவன் அதி ராஜேந்திரனுக்கு உதவி செய்ததாக பாணர் பாடியுள்ளார்.

வீரராஜேந்திர சோழனைப் பற்றி சிறிது பார்ப்போம். இவனுக்கு “ராஜகேசரி” என்ற பட்டப்பெயர் உண்டு. கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் இவன். இவனது ராணியார் பெயர் அருள்மொழிமங்கை என்பதாகும். முதலாம் ராஜேந்திர சோழனின் மூன்றாவது மகன் இவன். மூத்தவன் பெயர் ராஜாதிராஜன், இரண்டாமவன் 2ஆம் ராஜேந்திரன், இந்த வீரராஜேந்திரன் மூன்றாவது மகன். இவனுடைய பிள்ளைகள் மதுராந்தகன், கங்கைகொண்ட சோழன், மகள் ராஜசுந்தரி. இவன் இறந்த ஆண்டு 1070.

வரலாற்றில் அதிகம் இடம்பிடிக்காத ஒரு மன்னன் இந்த வீரராஜேந்திரன். காரணம் இவன் வாழ்க்கை முழுவதும் இவனுடைய அண்ணன்களான ராஜாதிராஜன், 2ஆம் ராஜேந்திரன் ஆகிய முந்தைய சோழ அரசர்களுக்கு உதவுவதிலேயே போய்விட்டதால் அதிகமாக இவன் சாதித்தவை எவை என்று கூறமுடியாத நிலை உள்ளது. இருந்தபோதிலும் தந்தை ராஜேந்திர சோழனுக்கோ, தன்னுடைய மற்ற சகோதரர்களுக்கோ எந்தவிதத்திலும் குறைவில்லாத வீரனாகவே இந்த வீரராஜேந்திர சோழன் இருந்திருக்கிறான்.

சோழமன்னர்கள் தங்களது மூத்த குமாரன் தான் பதவிக்கு வரவேண்டுமென்ற கண்டிப்பான வழக்கத்தைக் கடைப்பிடிக்காமல், பிள்ளைகளில் வீரமும், விவேகமும், நிர்வாகத் திறமையும் அனுபவமும் உள்ளவனையே தனக்குப் பின் மன்னனாக அங்கீகரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் இவர்களில் யாரும் யாருக்கும் சோடை போகவில்லையாதலின் ராஜேந்திரனின் மூத்த மகன் ராஜாதிராஜன் பதவிக்கு வந்தான். அவனையடுத்து, அவனது அடுத்த தம்பி, அவனுக்குப் பின் அவன் தம்பி என்று வரிசைப்படி ஆட்சிக்கு வந்தனர்.

வீரராஜேந்திரன் தன் தந்தையார் காலத்திலும் சரி, தன்னுடைய அண்ணன்மார்கள் காலத்திலும் சரி பல்வேறு பணிகளில் இருந்து தன்னுடைய திறமையை வெளிக்கொணர்ந்திருக்கிறான். தொண்டைநாட்டிலும், பாண்டிய நாட்டிலும், வேங்கி நாட்டிலும் இவன் ராஜப்பிரதிநிதியாக இருந்து சோழர் ஆட்சிக்குத் துணை புரிந்திருக்கிறான். சோழர்களின் கடற்படை ராஜேந்திர சோழன் காலத்தில் மிகவும் வலிமை பொருந்தியாதாக இருந்திருக்கிறது. இந்தக் கடற்படைக்குத் தலைமையேற்று வீரராஜேந்திரன் இலங்கைத் தீவுக்கும், ஸ்ரீவிஜயம், கடாரம், காடகம், பர்மா, சம்பா என பல நாடுகளுக்குச் சென்று போரிட்டு வெற்றி பெற்றிருக்கிறான்.

விஜயாலயன் ஸ்தாபித்த கடைச்சோழ வம்சத்தில் வீரம் செறிந்த மன்னர்களாகத் திகழ்ந்த ஆதித்தன், பராந்தகன், சுந்தரசோழன், ராஜராஜன், ராஜேந்திரன் இவர்கள் வரிசையில் வைத்துப் பார்க்கப்பட வேண்டிய வீரனாகத்தான் வீரராஜேந்திரன் தன் பெயருக்கு ஏற்ப இருந்திருக்கிறான்.

ராஜேந்திரனின் மகன் ராஜமகேந்திரன் தன் தந்தைக்கு முன்னதாகவே காலமாகிவிட்டபடியால் இரண்டாம் ராஜேந்திரனுக்குப் பிறகு அவனது தம்பி வீரராஜேந்திரன் பட்டத்துக்கு வந்தான். இவனுடைய காலம் சோழ சாம்ராஜ்யம் பரந்து விரிந்து கடல்கடந்தும் பரவிக் கிடந்தமையால் அதனைக் காப்பாற்றும் பொறுப்பு இவனுக்கு இருந்தது. ராஜேந்திர சோழனின் புதல்வர்களான ராஜாதிராஜன், 2ஆம் ராஜேந்திரன், வீரராஜேந்திரன் ஆகியோர் மொத்தமாக 16 முதல் 20 ஆண்டுகள் வரை ஒருவர் பின் ஒருவராக ஆட்சி புரிந்திருக்கின்றனர். இப்படி இவர்களது ஆட்சி இடைவெளி அதிகமில்லாமல் ஒருவர் பின் ஒருவராக பதவி வகித்ததால் ராஜராஜன் போலவோ, ராஜேந்திரன் போலவோ ஒரு ஸ்திரத்தன்மையோ, அல்லது எதிர்கள் பய்ந்து ஒடுங்கிப் போயிருந்ததைப் போலவோ இல்லாமல், எதிரிகளுக்குக் குளிர் விட்டுப் போய், நேரம் வாய்த்தால் சோழர்கள் மீது போர்தொடுக்க ஆயத்தமாயிருந்தனர், குறிப்பாக சிங்களர்களும், சாளுக்கியர்களும், பாண்டியர்களும் ஓரளவுக்கு சேர மன்னர்களும் பரம்பரை எதிரிகளாகவே இருந்திருக்கின்றனர்.

வீரராஜேந்திரனின் போர்க்கள சாகசங்கள் மிக இளம் வயதிலேயே தொடங்கிவிட்டது. இலங்கை படையெடுப்பில் இவனுடைய பங்களிப்பு இருந்தது. இலங்கையின் வெற்றிக்குப் பிறகு அந்த நாட்டை ஆளும் ராஜப்பிரதிநிதியாக நியமிக்கப்பட்டான் வீரராஜேந்திரன். தொடர்ந்து உறையூரிலும் தனித்து இருந்து சோழ சாம்ராஜ்யப் பிரதிநிதியாகச் செயல்பட்டான்.

சாளுக்கியர்களுக்கு எதிராகத்தான் இவன் அதிகம் போரில் ஈடுபட்டான். காரணம் வேங்கி அரசர்கள் சோழர்கள் பெண் கொடுத்த சம்பந்திகள். அவர்களை மேலைச் சாளுக்கியர்களிடமிருந்து காக்கும் பொறுப்பு தஞ்சை சோழர்களுக்கு இருந்தது. தற்போது ஆந்திராவிலுள்ள விஜயவாடாவுக்கு அருகில் கிருஷ்ண நதிக்கரையில் சாளுக்கியர்களுடன் நடந்த யுத்தம் மிகப் பெரிய யுத்தம். அதில் வீரராஜேந்திரன் மாபெரும் வெற்றி பெற்றான்.

தொடக்கத்தில் இவன் சேரநாட்டில் போரிட்டு வெற்றிகளைப் பெற்றன், தொடர்ந்து பாண்டிய நாட்டையும் போரிட்டுப் பல பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். இப்படி இவன் சேர நாடு, பாண்டிய நாடு என்று போர் புரிந்து கொண்டிருந்த காரணத்தால் இவனைத் தோற்கடிக்க இதுவே சமயமென்று தனது முந்தைய தோல்விகளை மறந்து சாளுக்கியன் சோமேஸ்வரன் சோழ தேசத்தின் மீது படையெடுத்து வந்தான். வீரராஜேந்திரனின் அண்ணன்மார்களான 2ஆம் ராஜேந்திரன் அவன் அண்ணன் ராஜாதிராஜன் ஆகியோரிடம் இவன் அடைந்த தோல்விகளை மறந்தவனாக வீரராஜேந்திரன் மீது துணிச்சலுடன் படையெடுத்தான்.

சோமேஸ்வரனுடைய புதல்வனான விக்கலன் எனும் விக்கிரமாதித்தன் (VI) கங்கைகொண்ட சோழபுரத்தைத் தாக்கினான். அப்போதுதான் வீரராஜேந்திரன் பாண்டியனையும், இலங்கை மன்னனையும் தோற்கடித்துவிட்டு சோழ நாடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போதுதான் போர் செய்துவிட்டுத் திரும்பிய சூட்டோடு இங்கு இந்த சாளுக்கியன் சோழர் தலைநகரத்தையே தாக்கியதால் ஆத்திரமடைந்த வீரராஜேந்திரன் அந்த விக்கிரமாதித்தனை ஓடஓட விரட்டியடித்தான். அவர்களைப் பின் தொடர்ந்து தாக்கி கங்கபாடி நாட்டைப் பிடித்துக் கொண்டு சாளுக்கிய நாட்டிற்குள்ளும் நுழைந்தான்.

வீரராஜேந்திரன் காலத்திய பல கல்வெட்டுக்கள் அவனது வெற்றியைப் பற்றி குறிப்பிடுகின்றன. ராஜராஜ சோழன் காலத்திலிருந்தே மேலைச் சாளுக்கியர்கள் போர்க்களத்திலிருந்து ஓட்டம் பிடிப்பதில் வல்லவர்களாகத் தொடர்ந்து இருந்து வந்திருக்கின்றனர். சோழர்களின் வீரத்துக்கு முன்பாக அவர்களுடைய ஆட்டங்கள் எதுவும் செல்லுபடியாவதில்லை. ராஜராஜன் காலத்தில் களத்திலிருந்து ஓட்டம் பிடித்தவன் சத்யாஸ்ரயன். ராஜேந்திர சோழன் காலத்திலும் இதே சத்யாஸ்ரயன் ஓட்டம் பிடித்தவன் தான். அவனோடு இரண்டாம் ஜெயசிம்மாவும் ஓட்டம்பிடித்த சாளுக்கியன். 2ஆம் ராஜேந்திரன் காலத்தில் தோற்றோடிய சாளுக்கியன் த்ரைலோக்கியமல்லன் முதலாம் சோமேஸ்வரன். வீரராஜேந்திரனிடமும் தோற்றோடிய பெருமை இந்த த்ரைலோக்கியமல்லனுக்கு உண்டு.

சாளுக்கியர்களுக்கு எதிரான சோழர்களின் போர் ஒன்றும் சாதாரணமானவை அல்ல. மிகக் கடுமையான போர். சோழர்கள் தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தி சாளுக்கியர்களை ஒழித்துவிட முயன்று போரிட்டும் அவர்கள் மிக சாமர்த்தியமாக ஒவ்வொரு முறையும் போர்க்களத்தைவிட்டு ஓடிப்போய் பிழைத்துக் கொண்டு வந்தார்கள். வீரராஜேந்திரன் தன் அண்ணன்மார்கள் காலத்திலேயே இந்த களம்விட்டு ஓடிடும் மாவீரர்களான சாளுக்கியர்களோடு போர் புரிந்திருக்கிறான். 2ஆம் சோமேஸ்வரன் தன்னுடைய தோல்விக்கு பழிவாங்கவும், களத்தை விட்டு ஓடிவிடாமலும் வெற்றி பெற்றுவிட வேண்டுமென்று தலைகீழாக முயன்றும் அவன் சாமர்த்தியம் எதுவும் வீரராஜேந்திரனின் முன் எடுபடவில்லை. சோமேஸ்வரனுடைய படைத் தளபதிகள் எல்லாம் பொலபொலவென்று சோழப் படைகளின் முன் வீழ்ந்தனர். சோழப் படைகளின் வீரத்துக்குத் தாக்குபிடிக்கமுடியாமல் சோமேஸ்வரன் மட்டுமல்லாமல் அவன் மகன் விக்கலன் எனும் 6ஆம் விக்கிரமாதித்தன் சிங்கணன் எனும் 3ஆம் ஜெயசிம்மா ஆகியோர் ஒட்டம்பிடித்த சாளுக்கியர்கள்.

தங்களது தொடர் தோல்விகளுக்கு ஒரு முடிவு கட்ட சாளுக்கியர்கள் ஒரு குறிப்பிட்ட நாளையும், இடத்தையும் சொல்லி அங்கு போருக்கு வரும்படி சோழர்களை அழைத்தனர். அதன்படி சோழர்படை 1067 செப்டம்பர் 10எல் அந்த இடத்துக்குச் சென்று சாளுக்கியர்களின் வருகைக்காகக் காத்திருந்தனர் என்கிறது மணிமங்கலம் கல்வெட்டுக்கள்.

சோழர்கள் ஒரு மாதகாலம் அங்கு காத்திருந்தும் சாளுக்கியப் படைகள் வந்து சேரவில்லை. கோபம் கொண்ட சோழர்கள் அந்தப் பகுதியில் சுற்றுவட்டாரங்களையெல்லாம் நாசம் செய்து ஆத்திரத்தைக் காட்டினர். பயந்து ஓடிய சாளுக்கியர்களின் கோழைத்தனத்தையும், தங்கள் வெற்றியையும் பறைசாற்றும் விதத்தில் சோழர்கள் துங்கபத்திரா நதிக்கரையில் ஒரு வெற்றித்தூணை நிறுவினர்.

இலங்கைப் போர்.
இலங்கையில் அப்போது அரசனாக இருந்தவன் விஜயபாகு என்பவன். இலங்கையின் தெற்குப் பகுதியில் ரோஹணா எனுமிடத்தையடுத்த சிறுபகுதியை இவன் ஆண்டுவந்தான். இவனுக்கு வட இலங்கையில் ஆக்கிரமித்திருந்த சோழர்களை விரட்டிவிடவேண்டுமென்கிற வேகம் இருந்தது. புத்த இலக்கியமான மஹாவம்சம் சொல்ல்கிறபடி சோழர் படைகள் ரோஹணா பகுதின் மீது படையெடுத்து விஜயபாகுவை அடக்கிவைக்க எண்ணியது. அச்சமடைந்த விஜயபாகு பர்மாவின் அரசனுக்கு உதவிகேட்டு ஆள் அனுப்பினான். அவனும் தன்னுடைய படைகளை கப்பலில் இலங்கைக்கு அனுப்பி வைத்தான். இந்த அன்னியப் படையின் உதவியோடு விஜயபாகு தமிழர் ஆக்கிரமித்திருந்த வடபகுதியில் கலகத்தை உருவாக்கினான். சோழர் படைகள் இந்த கலகத்தை அடக்கிவிட்டது. இருந்தாலும் விஜயபாகு தொடர்ந்து சில ஆண்டுகள் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தான்.

கடாரத்தின் மீது படையெடுப்பு.
வீரராஜேந்திரனின் ஆட்சிப் பொறுப்பேற்ற ஏழாம் ஆண்டில் கடாரத்து அரசன் உதவி கேட்டு அனுப்ப அவனுக்கு உதவியாகச் சோழர் படையை அங்கு அனுப்பி வைத்தான். அங்கு புரட்சியாளர்களை அடக்கிவிட்டு மீண்டும் ராஜ்யத்தை அந்த அரசனிடமே கொடுத்துவிட்டான் வீரராஜேந்திரன். இதெல்லாம் 1068இல் நடந்ததாக வரலாறு கூறுகிறது. சோழக்ர்ள் இப்போதைய இந்தோனேஷியா மலேசியா ஆகிய பகுதிகளை சுமார் 20 ஆண்டுகள் வரை ஆட்சி புரிந்திருக்கின்றனர். இவன் காலத்தில் தூரக்கிழக்கு நாடுகளை வென்று அங்கெல்லாம் வாணிபம் செய்யச் சென்ற உறவு 1215 வரை தொடர்ந்து வந்திருக்கிறது.

சாளுக்கிய விக்கிரமாதித்தனுடன் உறவு.
சாளுக்கியன் சோமேஸ்வரன் (I) காலத்துக்குப் பிறகு அவனுடைய மகன் 2ஆம் சோமேஸ்வரன் 1068இல் ஆட்சிக்கு வந்தான். அவனுக்கும் அவனுடைய தம்பியான விக்கிரமாதித்தனுக்குமிடையே பூசல் எழுந்தது. இந்த 6ஆம் விக்கிரமாதித்தன் தன்னுடைய முன்னோர்கள் சோழர்களிடம் அடிவாங்கியதை நினைவில் வைத்துக் கொண்டு அவர்களோடு மோதுவதால் எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்தான். ஆகையால் அப்போது சாளுக்கியப் பிரதேசத்தில் எழுந்த தாயாதிச் சண்டையில் தன்னை ஆதரிக்க சோழன் வீரராஜேந்திரனிடம் வேண்டுகோள் விடுத்தான். அவனுடைய பரிதாப நிலையைக் கண்டு மனம் இரங்கிய வீரராஜேந்திரன் அவன் பக்கம் நின்று சாளுக்கிய நாட்டுக்கு அவனை அரசனாக்கியதோடு அவனுக்குத் தன் மகளையும் திருமணம் செய்து கொடுத்தான்.

வீரராஜேந்திரன் வாழ்க்கை.
இவன் ராஜாதிராஜனுக்கும், 2ஆம் ராஜேந்திரனுக்கும் தம்பி என்பதை முன்பே பார்த்தோம். தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் கல்வெட்டு ஒன்றில் காணப்படும் செய்தியிலிருந்து இவனது மனைவியின் பெயர் அருள்மொழிநங்கை என்பது தெரிகிறது. இவனுடைய மகள் ராஜசுந்தரி என்பாளைத்தான் கீழைச் சாளுக்கிய மன்னருக்குத் திருமணம் செய்து கொடுத்தான். அந்த ராஜசுந்தரியின் மகன் அனந்தவர்மன் சோடகங்கதேவன் என்பான் கீழைச் சாளுக்கிய மன்னனாக இருந்தான்.

வீரராஜேந்திர சோழனுக்கு “சகலபுவனஸ்ரயா”, ஸ்ரீமேதினிவல்லபா”, “மகாராஜாதிராஜ சோழகுலசுந்தரா”, “பாண்டியகுலாந்தகா”, “ஆகவமல்லகுல கலா”, “ஆகவமல்லனை மும்மாடி வெண் கண்ட ராஜ்ஸ்ரயா”, “வீர சோழ” எனும் விருதுகள் இருந்தன. இவன் 1070இல் இறந்ததாகத் தெரிகிறது. இந்த அண்ணன் தம்பிகள் ஒருவருக்கொருவர் அதிகம் வயதி வித்தியாசமில்லாமல் இருந்திருக்கிறார்கள். வீரராஜேந்திரன் காலத்திலேயே தன்னுடைய மகனான மதுராந்தகனை காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட தொண்டை மண்டலாதிபதியாக நியமித்திருந்தான். அப்போது அவனுக்கு “சோழேந்திரன்” எனும் பட்டப்பெயரும் இருந்தது. இவனுடைய இன்னொரு மகனான கங்கைகொண்டசோழன் என்பவன் பாண்டிய நாட்டியத்தின் அதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தான். இவ்விருவரில் ஒருவர்தான் இவனுக்குப் பிறகு அதிராஜேந்திரன் எனும் பட்டப்பெயருடன் மன்னனாக முடிசூட்டிக் கொண்டான், ஆனால் அது இவ்விருவரில் யார் என்பது தெரியவில்லை. வீரராஜேந்திரன் தில்லையம்பலத்தான் நடராஜப் பெருமானுக்குத் தொண்டு புரிந்தவன். அந்த ஆடல்வல்லானுக்கு கழுத்துக்கு மிகுந்த விலை உயர்ந்த சிவப்புக் கற்கள் பதித்த மாலையொன்றை இவன் அளித்திருந்தான். இவன் சைவனாயினும் வைணவ ஆலயங்களையும் போற்றி வழிபட்டு பாதுகாத்து வந்தான்.
கி.பி. 1063 முதல் 1070 வரை ஆட்சிபுரிந்த வீரராஜேந்திரன் காலமான பின்னர் அவனது மகன் அதிராஜேந்திரன் என்பான் அரசு கட்டிலில் வீற்றிருந்தான்.

#சோழவரலாறு# தொடரும்

என்றும் பேரன்புடன் முனைவர் அர க #விக்கிரமகர்ணபழுவேட்டரையர்#